"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 3
" அரியது கேட்கின் " 3. வீடு திரும்பல் கண்ணாடி எதையும் மறைத்துவைத்துக் கொள்வதில்லை. கண்ணாடி வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தன்வழியே கடந்து செல்ல அனுமதிக்கிறது. கண்ணாடியின் நிழல் மட்டுந்தான் நிஜமான ஒளியாகவும் இருக்கிறது. நிழலும் சுடும், நிழலும் நிஜம்; கண்ணாடி ஒரு அறிவியல் முரண். சொல்லப்போனால் நிழல் தான் நிகழ்வின் சாட்சியமாக நிற்கிறது. பேரன்பின் சாட்சியமாய், அந்தரங்கங்களின் பார்வையாளனாய், தனிமையின் துணையாய், ஈருடல் பிணைந்திருக்கும் காமத்தில் உடல் மேல் உடலாய், எல்லா பருப்பொருளுக்கும் நிழலுண்டு. பிணத்திற்கும் கூட நிழலுண்டே, அசைவற்ற நிழல். புதைக்கப்பட்ட நிழல் வளர்ந்து ஒரு மரமாகி நிழல்தருகிறது. பிடிசாம்பலாய் கரைக்கப்பட்ட நிழல் ஒரு நீர்த்தாவரமாகிறது. நினைவுகளாகி சில நிழல் கள் நிலைபெற்று நின்று விடுகிறது. அங்கு நினைவுகள் வளர்ந்து மரமாகிறது . மருத்துவமனை வளாகத்தின் வேப்பமரக்காற்று அறைக்குள் நுழைந்து திரைச் சீலைகளை படபடக்கச் செய்தது. போர்வையை விலக்கி நான்கு விரல்களை நெற்றியில் பதித்து "பிள்ளைக்கு காய்ச்சல...