"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 2
"அரியது கேட்கின்" 2. வாசனை இருள் கவிழ்ந்திருந்தது. யார் இறந்தாலும் யார் பிறந்தாலும் இரவும் பகலும் வந்துகொண்டுதானிருக்கிறது. எத்தனை கோடி வாழ்வையும், எத்தனை கோடி சாவையும் கண்ணுற்றாலும், நித்தியத்துவமாய், வரலாற்றின் ஒரு நிரந்தர சாட்சியாய் காலம் மட்டுமே நிற்கிறது. காலத்திடமிருந்தே சகலமும் தோன்றுகிறது. காலமே சகலத்தையும் தோற்றுவிக்கிறது. கடைசியில் காலத்திடமே சகலமும் வந்து முடிகிறது. காலமே சகலமும், சகலமுமான கடவுளும். கடவுளை நம்புவோர்க்கு காலமே கடவுள். காலத்தை நம்புவோர்க்கு கடவுளே காலம். காலந்தான் கடவுளைக்கூட நிர்ணயிக்கிறது இல்லையா ? கடவுள் வாழ்ந்த காலம் தான் மனுதர்மத்தின் வழிகாட்டுதலாகிறது, அவர்களின் தீர்க தரிசனங்கள் தர்மங்களாகிறது. அவர்தம் கொள்கைகள் பின்பற்றப்பட்டு சமயமாகிறது. வழிபாட்டு முறைகள் மதங்களாகிறது. காலத்தின் உரைக்கல்லாய் வாழ்ந்துமுடித்த ஒருமனிதன் கடவுளென்றே உறைகிறான். மாலைகள் சூட்டப்பட்ட ஒரு கடவுளைப்போல் உறைந்திருந்தார் சக்திவேல். சக்திவேலின் இரண்டாவதுமகள் சரண்யா கணவர் மணிகண்டன், குழந்தை நந்தினியோடு வந்திறங்கினாள். சற்று நேரத்தில் அவரது அண்ணன் நடராசன் குடு...